search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சேலம் பசுமை சாலை"

    சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வீடுகள், விவசாய நிலங்களில் கருப்புக்கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    சேலம்:

    சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வழியாக சேலத்துக்கு 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என பசுமை சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விளை நிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகள் கையகப் படுத்துவதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நிலம் அளவிடும் பணி நடக்கும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் உதவியுடன் அளவிடும் பணி நடந்து வருகிறது. அப்போது சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுது புரண்டனர். சிலர் தீக்குளிக்க முயற்சியும் செய்தனர். ஆனாலும் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நேற்று மாலையில் நிறைவு பெற்றது.

    இந்த திட்டத்தை கைவிடக்கோரி 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டும் போராட்டம் இன்று முதல் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தது.



    அதன்படி சேலம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளான ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், கீரிப்பட்டி, குள்ளப்பட்டி, ராமலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டது. வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றினர்.

    தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களை அளவிடும் பணி நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை அடுத்த கோம்பூர், சின்னமஞ்ச வாடி, பெரிய மஞ்சவாடி, மாளகாபாடி, கொக்காரப்பட்டி, இருளப்பட்டி ஆகிய கிராமங்களில் 100-க்கும்மேற்பட்ட விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம் பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த சாலை 59 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது.

    தாம்பரம் அருகே மண்ணிவாக்கம் பகுதியில் தொடங்கும் சாலை படப்பை, குருவன்மேடு, பாலூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக காஞ்சீபுரம் மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் செல்கிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்படவில்லை. எனினும் விவசாய நிலங்கள் அதிக அளவில் கையகப்படுத்தப்படும் என்பதால் ஆரம்ப கட்டத்திலேயே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 525 ஹெக்டேர் நிலங்கள் (1300 ஏக்கர்) கையகப்படுத்தப்பட உள்ளன. 8 வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.

    உத்திரமேரூர் தாலுகா பகுதியில் மணல்மேடு, ஒழுகரை, வெங்கூர், அனுமந்த தண்டலம், சித்தேரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாய நிலங்களில் விவ சாயிகள் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறும் போது, “பசுமை வழிச்சாலையால் விவசாயிகள் நிலம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள விழுப்புரம்-சேலம் சாலையை விரிவுபடுத்தினாலே போதும்.

    2013 நில எடுப்பு சட்ட மசோதாபடி விவசாயிகளின் கருத்து கேட்ட பின்பே விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டும். ஆனால் இப்போது விவசாயிகளிடம் கருத்து கேட்காமலேயே நிலம் எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 6-ந் தேதி 5 மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் உள்ள 92 கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
    வேலூர்:

    சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டங்களிலும் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தங்கள் கண்ணெதிரிலேயே நிலம் பறிபோவதை பார்த்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டம் ஒரு புறம் நடந்து வந்தாலும் மறுபுறம் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    5 மாவட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. அவசர கதியில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. போலீஸ் படையுடன் வரும் அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கின்றனர். பசுமையை அழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைத்து போடப்படும் பசுமை சாலை திட்டத்தில் உள்நோக்கம் இருப்பதாகவே விவசாயிகள் சங்கம் புகார் கூறுகிறது.

    சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் 92 கிலோ மீட்டரில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

    இதற்கான நிலம் அளவீட்டு பணிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது. தர்மபுரியில் நேற்று முன்தினம் பணிகள் முடிந்தது. சேலம் மாவட்டத்தில் 7-வது நாளாக நடந்த அளவீட்டு பணிகள் நேற்று முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கிலோமீட்டர் தொலைவு சாலை அமைகிறது. சாலையின் அகலம் 110 மீட்டர் என முதலில் கணக்கிடப்பட்டது. தற்போது, 70 மீட்டர் அகலத்தில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் அரசுக்கு சொந்தமான 153 ஹெக்டர் நிலம், 18 ஹெக்டர் வன பரப்பு, 690 ஹெக்டர் தரிசு நிலம், 141 ஹெக்டர் விளை நிலம் உள்பட 861 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    திருவண்ணாமலையில் சுமார் 92 கிராமங்களை சேர்ந்த 30 ஆயிரம் குடும்பம் பாதிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை செங்கம், கலசப்பாக்கம் தாலுகாவில் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு சர்வே முடிந்துவிட்டது. 261 சிறு விவசாயிகள், 158 குறு விவசாயிகள், 35 பெரு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    செங்கம் அடுத்த மண்மலை, காத்தமடுவு கிராமங்களில் நில அளவீடு பணி இன்று நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் அதிகாரிகள் நில அளவீடு பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பசுமை சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், புதுப்பாளையம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நார்த்தம் பூண்டி, முத்தரசம்பூண்டி, நயம்பாடி, நம்மியந்தல், நீப்பந்துறை உள்பட 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

    அடுத்த மாதம் 6-ந் தேதி 8 வழிச்சாலை அறிவிப்பு அரசாணையை எரித்து போராட்டம் நடத்தவும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    மேலும் ஜனாதிபதி, பிரதமர், முதல்-அமைச்சர், கலெக்டர் மற்றும் நில எடுப்பு வருவாய்த்துறை அலுவலர் ஆகியோருக்கு ஆட்சேபனை மனுக்களை நேரடியாகவும், பதிவு தபால் மற்றும் மின் அஞ்சலில் அனுப்பவும் 8 வழி பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் பாதகங்கள் குறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில்:-

    பசுமை சாலை திட்டத்தால் கஞ்சலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, வேடியப்பன் மலை, தீர்த்த மலை என மீண்டும் உருவாக்க முடியாத 8 மலைகள் பாதிக்கப்படுகின்றன.

    நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்படையும். உணவு பொருட்களை வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை போல நீரையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படும். உணவு பஞ்சம் ஏற்படும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி விடும் என்று கூறினர்.


    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த சில நாட்களாக 8 வழி சாலைக்கு நிலம் அளக்கும் பணி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி பகுதியில் நடைபெற்றது. இந்த பகுதியில் புகழ் பெற்ற மஞ்சவாடி தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து பொதுமக்களும் சாதி மத வேறுபாடுகள் இன்றி தங்கள் குறைகளை கூறி வேண்டி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

    இதற்காக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம், கேரளம், கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து வந்து செல்வார்கள். இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

    8 வழிச்சாலைக்காக நிலம் எடுக்கும் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பில் உள்ள 3 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை உள்ளது. இதில் இந்த தர்காவை நிறுவிய ஹரத்சையத்தில் சார் அலிசா பாபா மற்றும் 5 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் இடமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன் மலை பகுதிகளில் வாழும் காட்டெருமை, பன்றி, முள்ளம் பன்றி, குரங்கு, சிறுத்தை, கரடி, மான்கள் என்று தண்ணீர் தேடி வரும் 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குட்டை ஏரியில் நிலம் எடுக்கும்படி உள்ளது.

    இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து 8 வழி சாலை அமைத்தால் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வரும் சூழல் ஏற்படும். எனவே இந்த பாதிப்பை எப்படி சரி செய்வார்கள் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    மஞ்சவாடி கணவாயில் உள்ள வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.

    இந்த கோவில் மிகவும் பழமையானது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணிகளின் காவல் தெய்வமாக வெள்ளையப்பன் உள்ளார். இந்த கோவிலில் வேண்டி பூஜை செய்து வாகன சக்கரங்களில் எலுமிச்சை வைத்துவிட்டு வாகனத்தை செலுத்தினால் பாதுகாப்புடன் வெள்ளையப்பன் நம்மை காப்பார்.

    இங்கு வேண்டுதலில் பயன் அடைந்தவர்கள் தினமும் தனது உறவினர்களுடன் வந்து நேர்த்தி கடன் செலுத்தி ஆடு, கோழி, பலியிட்டு சாப்பிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமைகளிலும், அஷ்டமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சேதமின்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

    வன பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அரிய வகை வாகை, புங்கன், தேக்கு, மூங்கில் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சாலை பணிக்காக வெட்டப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    ×